வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்க கோரி மன்னாரில் அமைதி போராட்டம்

வாஸ் கூஞ்ஞ) 07.08.2026

“இலங்கை அரசே! எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்!”

இலங்கை அரசானது வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களின் காணிகளை உடன் விடுவிக்க கோரி மன்னாரில் அமைதியான போராட்டம் நடைபெற்றது

மெசிடோ நின்று வனத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (07.08) காலை மன்னார் நகரின் சுற்று வட்டத்திற்கு முன்பாக மன்னார் மக்களுடன் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகள் ஆண்கள் பெண்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

நீண்டகாலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக இடையறாது போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறுவதுடன், இதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவு மெசிடோ நிறுவன அமைப்பினால் வழங்கப்பட்டது

ஒன்றிணைவோம் – உரிமைக்காக குரல் கொடுப்போம்! எனவும் இதற்க்கான ஒழுங்கமைப்பை மேற்கொண்டுள்ள மெசிடோ நிறுவனம் வேண்டியுள்ளது