எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயிர்செய்கையில் சட்டவிரோத பீடைநாசினிகளின் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வானது விவசாய விரிவாக்கல் பிரதி பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தலைமையில் சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று (16) நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
இதன் போது சட்டவிரோத பீடைநாசினிகளின் பயன்பாட்டினால் மாவட்டத்தில் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், விவசாய இரசாயண விற்பனையாளர்கள், விவசாய விரிவாக்க உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இடம் பெற்றது.
பயிர்ச்செய்கையில் பாதுகாப்பானதும் சட்டபூர்வமானதுமான பீடைநாசினிகளை பயன்படுத்தல் மற்றும் சட்டவிரோத பீடைநாசி பயன்பாட்டை தடுப்பதற்கான பொறிமுறைகளை வலுப்படுத்துவதற்காகு விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டன.
இந் நிகழ்வின் வளவாளராக பீடைநாசினிகள் பதிவாளர் அலுவலக தலைமை அதிகாரி கலாநிதி ஜே.பி மாரசிங்க அவர்கள் பீடை நாசினி தொடர்பான சட்ட ஒழுங்குகள், சட்டவிரோத பீடைநாசிகளின் பயன்பாட்டினால் மனித ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பான விளக்கங்களை தெளிவு படுத்தியதுடன் சட்ட விரோத பீடை நாசினிகளை விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் விவசாயத் திணைக்கள அதிகாரிகள், விவசாய போதனாசிரியர்கள், இரசாயண விற்பனையாளர்கள், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் விவசாயிகள் மத்தியில் இரசாயண பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வலுப்படுத்த வேண்டும் என்றார்.


