இலங்கை தனது தேவைகளுக்காக இறக்குமதி விதைகளில் தங்கியிருப்பதாலும், உலகளாவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையாலும் எதிர்காலத்தில் பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிடும் என தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகூன் எச்சரித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் பின்வரும் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்:
நாட்டின் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கான விதைகளில் சுமார் 92 வீதம் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு இது 80 வீதமாக இருந்த நிலையில், தற்போது பாரியளவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக மலைநாட்டு மரக்கறிச் செய்கைக்கான விதைகள் மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
எனினும், அவற்றின் தரத்தை பரிசோதிக்க முறையான கட்டமைப்பு எதுவும் இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தனியார் துறையின் ஏகபோக உரிமையால் விதைகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
இது கேரட், கோவா, லீக்ஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி போன்ற பயிர்ச்செய்கைகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயத் திணைக்களம் நாடு முழுவதும் சுமார் 18 விதை உற்பத்திப் பண்ணைகளை நடத்தி வந்தபோதிலும், உள்நாட்டு விதை தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்று தென்னகூன் தெரிவித்துள்ளார்.
உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரும் காலங்களில் விதை இறக்குமதி 95 வீதத்தை தாண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
இது உள்நாட்டு விதை வளங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, பதிவு செய்யப்பட்ட விதை உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் உள்நாட்டு விதை உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்


