எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநகர சபைக்கு பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்களுக்கு துரிதமானதும், வினைத்திறனானதுமான சேவைகளை ஒரே கூரையின் கீழ் உடனுக்குடன் வழங்கும் நோக்கில், புதிய Token (வரிசைச் சீட்டு) முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் திரு. நாகராஜா தனஞ்ஜெயன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆளுமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையை, மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. சிவம் பாக்கியநாதன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர், பிரதம கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர சபைக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
புதிய Token முறையின் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில், குறைந்த நேரத்தில், வினைத்திறனான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாநகர சபைக்கு தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக வருகை தரும் அனைத்து பொதுமக்களும், முகப்பு அலுவலகத்தில் Token (வரிசைச் சீட்டு) பெற்றுக்கொண்ட பின்னரே தங்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என மாநகர சபை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு சிறந்த, இலகுவான மற்றும் நவீன நிர்வாக சேவைகளை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


