எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 56ஆவது வருடாந்த மாநாடு, சங்கத்தின் தலைவர் ஏ. பாலகிருஷ்ணன் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிராந்திய கலாசார மண்டபத்தில் இன்று (22) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் 345 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் உறுப்பினர்களை வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யும் நிகழ்வு, மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் நா. ரேகன் மேற்பார்வையில் நடைபெற்றது.
இவ்வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்டவர்கள் இரண்டு வருடங்களுக்கு தமது சேவையை வழங்கவுள்ளனர்.
இதன்போது ஓய்வுபெற்றுச் சென்ற கிராம உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், கிராம உத்தியோகத்தர்களின் பணி மிகவும் மகத்தானது எனத் தெரிவித்தார். குறிப்பாக வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்த காலங்களிலும் இரவு பகலாக மக்களுக்கு சேவையாற்றி வரும் கிராம உத்தியோகத்தர்களுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி என். சத்தியானந்தி, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


