எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் “Inter-Cultural Exchange Program – 2026” எனும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு இளைஞர் இந்து மன்ற மண்டபத்தில் இன்று (22) மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் மற்றும் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கலாசார மேம்பாட்டுப் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ரணசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
தமிழ் சிங்களம் இனங்களின் பாரம்பரியங்களையும் கலாசார விழுமியங்களையும் பிரதிபலிக்கும் வகையில், கண்ணுக்கு விருந்தாகும் பல்வேறு கலாசார நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
பல்வேறு சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இக்கலாசாரப் பரிமாற்ற நிகழ்வு, தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந்நிகழ்வில் குண்டகசாலை பிரதேச செயலாளர் கே.எஸ்.டி. திஸாநாயக்க, குண்டகசாலை கலாசார நிலையத்தின் பொறுப்பதிகாரி எச்.எம்.ஐ.ஜி.ஏ.பி. பண்டார, மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார நிலையத்தின் பொறுப்பதிகாரி அமலினி ரஞ்சித்குமார், துறைசார் நிபுணர்கள், கலாசார நிலையங்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலாசார மத்திய நிலையங்களுக்கு இடையில் இவ்வாறான பரஸ்பர கலாசாரப் பரிமாற்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவது, வெவ்வேறு சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதுடன், சிறந்த சகோதரத்துவத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான களத்தினை ஏற்படுத்துகின்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய மாணவ மாணவியர்களுக்கு நினைவு சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


