மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, கைதிகளினால் மஹர சிறைச்சாலையினுள் ஏற்படுத்தப்பட்ட சேதவிபரங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, குறித்த பதற்றமான சூழ்நிலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டார்.


