( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நேற்று முன்தினம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சிறப்பாக நடைபெற்றது .
ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஓசையுடன், மேளதாளம் ஒலிக்க பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும் சக சிவாச்சாரியார்கள் சமூகத்தில் கொடியேற்றப்பட்டது.
இவ்வாண்டு, நடன பாட ஆசிரியர் ஆலோசகர் திருமதி தேவமலரின் வழிகாட்டலில், திருமதி.நிர்மலா. சயனொளிராஜன் நடன ஆசிரியரின் நெறியாள்கையில் செல்வி.என்.சண்முகாவின் நடன நிகழ்வு கொடியேற்றிய பின்னர் சிறப்பாக இடம்பெற்றமை இம்முறை சிறப்பம்சமாக இருந்தது.
தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி புதன்கிழமை சமுத்திரத்தில் நடைபெறும்.அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
அன்றைய தினம் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன் செலுத்தும் முக்கியமான கிரியை அங்கு நடைபெறுவது வழமையாகும்.
மறுநாள் 13 ஆம் தேதி பூங்காவனத்திருவிழா வள்ளி திருமணமும் நடைபெறும்.
தொடர்ந்து மறுநாள் 14 ஆம் தேதி வயிரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளது. .


