(ஷனா)
இலங்கைக்கான சீன குடியரசு தூதுவர் கீ சென்ஹொங் (H.E. Qi zhenhong) இன்று (04.06.2026) கல்முனை அல் -அஷ்கர் வித்தியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது சீன குடியரசு தூதுவருக்கு பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எம்.எஸ். றிஸானா தலைமையிலான நிர்வாகத்தினரால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் வருகை தந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
“சீன இலங்கை சகோதர பாசம்” எனும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் ,அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கழுவாராய்ச்சி உட்பட கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச நலன் விரும்பிகள், பெற்றோர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது சீன மொழி பாடலுக்கு சீன கலாசாரத்தில் மாணவி ஒருவர் நடனமாடி எல்லோரதும் பாராட்டை பெற்றார். சீன தூதுவர் மற்றும் அதிகாரிகள் மாணவியை வாழ்த்தி பாராட்டியதோடு வருகை தந்த சீன நாட்டுக்கான இலங்கை தூதுவரை பாடசாலையின் நிர்வாகத்தினர் சீன கலாசார முறையில் கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கி தமது மரியாதையை தெரிவித்தனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக தூதுவருக்கும் இலங்கை நாட்டிற்கும் இடையிலான நட்புறவை விரிவுபடுத்தும் நோக்கில் நினைவுச்சின்னம் வழங்கி சீன தூதுவரை கௌரவித்தனர்.


