ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க திட்டம்!

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மாற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் எரிபொருள் விலைகள் உயரும் சாத்தியக்கூறுகளைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இது தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல்களும் கணக்கீடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

புதிய பேருந்து கட்டணக் கணக்கீடுகள் ஜூன் மாத ஆரம்பத்தில் இறுதி வடிவம் பெறவுள்ளன.

அதன் பின்னரே புதிய கட்டணப் பட்டியல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இதன்படி, தற்போது 30 ரூபாயாக அறிவிடப்படும் குறுகிய தூரப் பயணங்களுக்கான குறைந்தபட்ச பேருந்து கட்டணம், ஜூலை முதல் 40 ரூபாய் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலுவைகளைச் செலுத்துவதற்காக அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையைச் சமன் செய்ய முற்படும் போது, எரிபொருள் விலைகளை உயர்த்த நேரிடலாம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.

அவ்வாறு எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால், பயணிகள் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்றும், போக்குவரத்துத் துறையில் நட்டமடையாமல் தப்பிப் பிழைப்பதற்குக் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.