இன்று காரைதீவு கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு ஆரம்பம்

(வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு இன்று 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன் ஆரம்பமாகவுள்ளது.

ஆலயத்திலிருந்து தர்மகர்த்தாக்கள் கப்புகனார் சகிதம் பக்தர்கள் கடலுக்குச்சென்று தீர்த்தம் எடுத்து வரும்வழியில் கலயாணக்கால் முறித்து அதனைக்கொணர்ந்து ஆலயத்தில் நடுவார்கள்.

தொடர்ந்து ஏழு நாட்கள் சடங்கு நடைபெற்று ஜூன் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும்.

சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார் தலைமையில் நடைபெறும். சடங்குநாட்களில் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் பச்சைகட்டல் நிகழ்வும் இடம்பெறும்.

ஜூன் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் பி.ப.3மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவமும் நடைபெறும்.

அதேவேளை ஜூன் 08ஆம் திகதி எட்டாம் சடங்குப்பூஜை இடம்பெறும் .