உணவகங்களில் ஷவர்மா, கிரில் சிக்கன் போன்ற உணவுகளுடன் வழங்கப்படும் ‘மயோனைஸ்’ (Mayonnaise) மீதான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பச்சை முட்டையிலிருந்து (Raw Egg) தயாரிக்கப்படும் மயோனைஸ் எளிதில் பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்படக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சால்மோனெல்லா (Salmonella) எஸ்கெரிச்சியா கோலி (E. coli) லிஸ்டீரியா (Listeria) போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இதில் உருவாவதால், இதை உண்பவர்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் உணவு நச்சு (Food Poisoning) ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பொதுமக்களின் நலன் கருதி முதன்முதலில் இந்தத் தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்தத் தடையின் காலம் முடிவடைய உள்ள நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறையின் பரிந்துரையின்படி, தடையை மேலும் ஓராண்டுக்கு (ஏப்ரல் 2027 வரை) நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பச்சை முட்டையைப் பயன்படுத்தி மயோனைஸ் தயாரிப்பதற்கும், சேமிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் இந்தத் தடை பொருந்தும்.
விதியை மீறி மயோனைஸ் தயாரிக்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிமம் இரத்து செய்யப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.


