தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து இலங்கைக்கு உலர்ந்த பழப் பைக்கற்றுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞர் எனத் தெரியவந்துள்ளது.
இவர் பேங்காக்கிலிருந்து குனு 140 என்ற வானூர்தி மூலம் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
வானூர்தி நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவர் சோதனையிடப்பட்டார்.
சந்தேக நபர் தனது பயணப் பொதியில் இருந்த உலர்ந்த பழப் பைக்கற்றுக்களைப் பிரித்து, அதற்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, மிகவும் நுணுக்கமான முறையில் போதைப்பொருளைப் பொதி செய்து மறைத்து வைத்திருந்தார்.
சோதனையின் போது அவரிடமிருந்து 2,505 கிராம் (சுமார் 2.5 கிலோ) ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இதன் சந்தைப் பெறுமதி சுமார் 25,050,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களுடன் வானூர்தி நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


