(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா 4 ஆம் மற்றும் 5ம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகின்றன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இப்பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு நிகழ்வில் மொத்தமாக உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு முடித்தவர்கள் என மொத்தமாக 1966 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும் இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாள் நிகழ்வில் கல்வியமைச்சின் பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி இரண்டாம் நாள் நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன அவர்களும் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இப்பட்டமளிப்பு விழா இரண்டு நாட்களும் தலா மூன்று அமர்வுகளாக நடைபெற்றன.
சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளின் முதலாவது அமர்வின் போது 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது மூன்றாவது அமர்களின் போது முறையே 345 மற்றும் 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும் விழாவின் இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை, தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


