நேபாள பெருவெள்ளதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,388 ஆக உயர்வு!

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,388 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதுடன், பல பகுதிகள் வெளி உலகத்துடனான தொடர்பை இழந்துள்ளன.

இது தொடர்பாக நேபாள பொலிஸார் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 480 ஆண்கள், 269 பெண்கள், 52 சிறுவர்கள் மற்றும் 33 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் காணாமல் போன பலரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்டப் பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கப்பட்டுள்ளன.

நேபாள பொலிஸாரின் தரவுகளின்படி, மொத்தம் 7,592 மீட்புப் பணியாளர்கள் தற்சமயம் களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல படகுகள் மற்றும் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இப்பெருவெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், உலர் உணவு மற்றும் அவசர மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகளில் அரசு இயந்திரமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

மேலும், வெள்ளப் பாதிப்புக்குப் பிந்தைய நோய் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.