எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று (01) விசேட விஜயத்தை மேற்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பேரில், வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க அவர்களுடன் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.
இதன் போது மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பான நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் அத்தியாவசிய தேவையான நீரை வழங்குவதற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு இதன் போது அதிகாரிக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியதுடன் மாவட்டத்திற்கு தேவையான நீரினை முந்தானையாறு திட்டம் மற்றும் மாதுரு ஓயா வலதுகரை வாய்க்கால் மூலம் வாகனேரி குளத்திற்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு எமது நாட்டு பணத்தில் மேற்கொள்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், நீர்வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் , பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ.கே.எம். அப்துல்லாஹ், பொறியியலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய நெருக்கடிக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதுடன், எதிர்காலத்திற்கான நிலையான நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் நீர் வழங்களுக்கு தேவையா நிதியினை அவசர தேவை கருதி நீர் வழங்கல் அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவையுடாக வழங்குவதற்கு தேவையா நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


