கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

பத்தினி தேவாலயத்தின் தீர்த்த உற்சவ வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு, கடுவெல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (16) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேவாலயத்தின் பெரஹெரா இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை நடைபெறவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பெரஹரா தேவாலயத்திற்கு அருகில் ஆரம்பமாகி, 143 அவிசாவளை – கொழும்பு பேருந்து வீதி வழியாக கடுவெல ராஜசிங்க பாலத்தைக் கடந்து, பண்டாரவத்தை மற்றும் பியகம பகுதிகளைச் சென்றடையவுள்ளது.

தீர்த்த உற்சவ சடங்குகள் நிறைவடைந்த பின்னர், அதே வீதி வழியாக, பெரஹரா மீண்டும் கடுவெல சந்தியை கடந்து தேவாலயத்தை வந்தடையவுள்ளது.

இதன் காரணமாக பெரஹரா செல்லும் காலப்பகுதியில் குறித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.