எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தமது வீடுகளில் குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்வதற்கு உதவும் வகையில் கட்டில் மற்றும் மெத்தைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.08.2026) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கிராம அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழுள்ள முதியோருக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக, 2026ஆம் ஆண்டுக்காக நடைமுறைப்படுத்தப்படும் முதியோர்களுக்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.293,000.00 நிதியின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 13 முதியோர்களுக்கு கட்டில் மற்றும் மெத்தைகள் வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில், கணக்காளர் எம்.ஐ.எஸ். ஸஜ்ஜாத் அஹமட், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. நஜீம், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச். சுல்பிகா, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பீ. றஜியா மற்றும் கிராம உத்தியோகத்தர்களான எம்.எம். அன்வர் சாதாத், எம். ரம்ளான், எஸ். சஜ்மி, எம். றிஹாஸ் இஸ்மாயில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முதியோர்களின் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


