யாழ் செம்மணி மனித புதைகுழியில் புதிய குழிகளை தோண்டுவது தொடர்பில் இன்று தீர்மானம்!

Messenger
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் புதிதாக எந்தப் பகுதியில் குழிகளைத் தோண்ட வேண்டும் என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கப்படவுள்ளதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டதுடன், 6 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஏற்கனவே குவியலாக அடையாளம் காணப்பட்டு 42 என இலக்கமிடப்பட்ட மனித என்புக் குவியலும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை மொத்தமாக 544 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதுடன், அவற்றில் 530 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஏற்கனவே இந்தப் பகுதியிலிருந்து அடையாளம் காணப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்ட பிற சான்றுப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் படம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதற்கமைய, 1 முதல் 37 வரை இலக்கமிடப்பட்ட பிற சான்றுப் பொருட்கள் முழுமையாகப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா மேலும் தெரிவித்தார்.