காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு அமர்வு தம்பலகாமத்தில்

ஹஸ்பர் ஏ.எச்-

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் (PSC) அனுசரணையில், தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு அமர்வு நேற்று (07)தம்பலகாமம், கல்மெட்டியாவ பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

​மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.டி.எம். பாரிஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

​இந்நிகழ்வின் தலைமை வளவாளராகத் தம்பலகாமம் பிரதேச செயலகக் குடியேற்ற உத்தியோகத்தர் ஏ.எம்.இர்ஷாத் அவர்கள் கலந்துகொண்டு காணி உரிமை தொடர்பிலான தெளிவூட்டல்களை வழங்கினார். மேலும், அப்பகுதிக்கான கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மக்கள் சேவை மன்றத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கெடுத்தனர்.

​காணி ஆவணங்களுக்காக விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்ட இக்கலந்தாய்வு அமர்வில், காணி ஆவணமாக்கல் தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விநியோகிக்கப்பட்டன.

​சிலி நாட்டின் சான்டியாகோவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் SELAVIP Foundation நிறுவனத்தின் நிதி அனுசரணையில், “Facilitate for Regularization of Land Title” திட்டத்தின் கீழ் இவ்வமைப்பும் விழிப்புணர்வுச் செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.