தம்பலகாமத்தில் கிளீன் சிறீலங்கா “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்-

கிளீன் சிறீலங்கா”அத்தம “தேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று (08.08.2026) விசேட தூய்மைப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி, முப்படைகளின் உயரதிகாரிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதானமாக தம்பலகாமம் பத்தினிபுர குப்பை மேட்டு வீதி ஓரப் பகுதி முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டன. இது தவிர தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள 11கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் தூய்மையாக்கப்பட்டன.

இதன்போது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், தேங்கிக் கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டு சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணுவதன் அவசியம் தொடர்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கு பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனவும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

தேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.