“தேசிய நேர்மை வாரத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான விழிப்புணர்வு நடைபவனி”

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் “தேசிய
நேர்மை வாரம்” நேற்றைய தினத்தில் இருந்து ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சகல அரச திணைக்களங்களில்
கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களின் தூய்மையான அரச சேவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் “தேசிய
நேர்மை நடைபவனி மாவட்ட பிரதான நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது .

தேவநாயகம் மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி நகரின் முக்கிய வீதி வழியாக காந்தி
பூங்கா வரை விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் நேர்மை வாரத்தின் முக்கியத்துவம் பற்றி அரசு ஊழியர்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றும் இங்கு பெற்றது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த விழிப்புணர்வு நடைபவனியில் நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கங்கள் உடைய பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தி சென்றனர்.

திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் சகல பிரதேச செயலக உயர் அதிகாரிகள் ஊழியர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.