இலங்கை போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்ட இருவர் இராமேஸ்வரத்தில் கைது!

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில், இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இருவர் இறங்கியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், அவர்கள் இலங்கையின் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என இராமேஸ்வரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு வந்ததாகவும், அதற்காகச் சுமார் 3 லட்சம் ரூபாய் செலுத்தி தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை அடைந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வழக்குகள் இலங்கையில் நிலுவையில் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.