எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மகளிர் மற்றும் சிறுவர்கள் அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரம் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு நேற்று (18) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எஸ்.சுதர்சினி பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு நிகழ்வைச்சிறப்பித்தார்.
மேலும், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.ஸாஹித், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.தாஹிர், முன்பிள்ளைப்பருவ மாவட்ட இணைப்பாளர் ஏ.முரளிதரன், மாவட்ட செயலக பதவி நிலை உதவியாளர் ஏ.எம்.றிழா, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சர்ஜுன், வாகரை பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர் சசிதரன், சிறுவர் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“வியத்தகு சிறுவர் உலகத்திற்கு ஒளிவிளக்காகும் அன்பான குடும்பம்” என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரம் ஜூலை 14 முதல் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய இந்நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கலந்து கொண்ட கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றப்பட்டதுடன், நிகழ்வின் நிறைவில் பங்கேற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.


