மட்டக்களப்பில் வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (07) பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகளவில் விபத்துகள் இடம்பெறும் பகுதிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், விபத்துகள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் பொதுமக்கள், சாரதிகள் மற்றும் பாதசாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகள் எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநிதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. நிர்மலராஜ், பொலிஸ் சிரேஷ்ட பரிசோதகர் சரத்சந்திர, திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்