தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன், பயங்கரவாத தடைச் சட்டத்தில் RAP பாடகர் கைது செய்யப்பட்டதை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியுடன் சந்திப்பில் முன்வைத்தார்
பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் – 11 ஜூன் 2026
தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள், ஐரோப்பிய வெளிநாட்டு நடவடிக்கை சேவையின் (EEAS) தெற்காசியப் பிரிவின் (ASIAPAC) தலைவரான திரு. சார்ல்ஸ் வைட்லியை பிரஸ்ஸல்ஸில் சந்தித்தார். இச்சந்திப்பில் இலங்கை மற்றும் தமிழ் மக்களைப் பாதிக்கும் பல்வேறு அரசியல், மனித உரிமை மற்றும் நல்லாட்சிசார் விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
சார்ல்ஸ் வைட்லி அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வெளிநாட்டு சேவையான EEAS இன் தெற்காசியப் பிரிவின் தலைவராக உள்ளார். அவர் இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளுடனான EU உறவுகளை மேற்பார்வையிடுகிறார்.
இலங்கை தொடர்பாக மனித உரிமைகள், நல்லாட்சி, GSP+ வர்த்தகச் சலுகை, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு போன்ற விடயங்களில் EU கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் செல்வாக்கு மிக்க அதிகாரி ஆவார்.
சந்திப்பில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விடயங்களில் ஒன்றாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) தொடர்ச்சியான பயன்பாடும், அதன் கீழ் தமிழ் ராப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்சன் (ஹிப் ஹொப் சங்கி) கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரமும் அமைந்தது. இந்த வழக்கு தொடர்பாக சாணக்கியன் தீவிர கவலை வெளியிட்டதுடன், இது கருத்துச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை எடுத்துரைத்தார்.
சந்திப்பின்போது, பாடகரின் கைது தொடர்பாக ITAK பொதுச் செயலாளர் M A. சுமந்திரன் எழுதிய கடிதத்தை சாணக்கியன் கையளித்தார். மேலும், PTA சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தினார். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் இந்தச் சட்டத்தை நீக்குவதாக பலமுறை உறுதியளித்திருந்த போதிலும், குறிப்பாக தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இது தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
PTA சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வர்த்தக சலுகைத் திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொள்ள வேண்டிய கடமைகளுடன் தொடர்புடையதாகவும் சாணக்கியன் கவனம் செலுத்தினார். ஹிப் ஹொப் சங்கி உள்ளிட்ட பலர் PTA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவது, GSP+ தகுதிக்கான அடிப்படையாக அமைந்துள்ள சர்வதேச மனித உரிமை உறுதிப்பாடுகளை இலங்கை பின்பற்றுகிறதா என்ற தீவிர கேள்விகளை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார். PTA சட்டத்தை ரத்து செய்வதாக தொடர்ச்சியாக அரசுகள் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், இச்சட்டத்தின் தொடர்ந்த பயன்பாடு அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம், உரிய சட்ட நடைமுறை மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பான இலங்கையின் உறுதிப்பாடுகளை பலவீனப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
நீண்டகாலமாக நடத்தப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் சந்திப்பில் பேசப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் ஜனநாயக பிரதிநிதித்துவமும் அத்தியாவசியமானவை என சாணக்கியன் வலியுறுத்தினார்.
நடைபெற்று வரும் அரசியலமைப்புச் சீர்திருத்த முன்மொழிவுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. எதிர்கால அரசியலமைப்பு ஏற்பாடுகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம் மற்றும் அபிலாஷைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையும் சாணக்கியனால் முன்வைக்கப்பட்டது. தங்களது அன்புக்குரியவர்களைத் தேடி உண்மை மற்றும் நீதி கோரி தொடர்ந்து போராடி வரும் குடும்பங்களின் நிலையை அவர் எடுத்துரைத்தார். சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக பொறுப்புக்கூறல், நம்பகமான உண்மையறிதல் செயல்முறைகள் மற்றும் நீதி வழங்கப்படுவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தமிழர் பெரும்பான்மை பகுதிகளில் தொடர்ந்தும் நிலவி வரும் காணி ஆக்கிரமிப்பு பிரச்சினையும் விவாதிக்கப்பட்டது. கணிசமான அளவிலான காணிகள் இன்னும் இராணுவம் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியதுடன், அவை விரைவாக விடுவிக்கப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கோரினார். இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளக் குடியேறவும், வாழ்வாதாரங்களை மீள உருவாக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் கண்ணியத்துடன் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் காணி விடுவிப்பு இன்றியமையாதது என அவர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல், மனித உரிமை மற்றும் சமூக நீதி சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை சாணக்கியன் மீண்டும் வலியுறுத்தினார். இவ்விடயங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதையும் அவர் வரவேற்றார்.


