இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் ‘ஆயுஷ்’ புலமைப்பரிசில்

ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2026-2027 கல்வியாண்டில் பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரையான பிரிவுகளில் கற்க விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.

ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பினை தொடர விரும்பும் விண்ணப்பதாரிகள் க.பொ.த. உயர் தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில் சித்திபெற்றிருக்கவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை யோகாவில் B.Sc மற்றும் B.A (யோகா சாஸ்திரம்)ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் க.பொ.த. உயர் தரத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அத்துடன் ஆயுர்வேதம், சித்த, யுனானி மற்றும் ஹோமியோபதி துறைகளில் பட்டப்பின்படிப்பினை தொடர விரும்புவோர் இந்திய மருத்துவ மத்திய பேரவையினால் அங்கீகரிக்கப்படுகின்ற பட்டப்படிப்பினை பூர்த்திசெய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அத்துடன் ஆயுர்வேத, யுனானி மற்றும் யோகா ஆகியவற்றில் PhD கற்கைநெறியினைத் தொடர விரும்புவோர் குறித்த துறைகளில் இந்திய மருத்துவ மத்திய பேரவையினால் அங்கீகரிக்கப்படுகின்ற இளமாணி மற்றும் முதுமாணி பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

M.Sc (யோகா) மற்றும் PhD (யோகா) படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், முறையே ஏதேனும் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுடன், இதற்காக தங்குமிட கொடுப்பனவு மற்றும் வருடாந்த உதவித்தொகை ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ICCR A2A தளம் ஊடாக (www.a2ascholarships.iccr.gov.in ) 2026 மே 15ற்கு முன்னதாக சமர்ப்பிக்கவும்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவினை 0112421605, 0112422788, 0112422789 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் அத்துடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் தொடர்பு கொள்ளலாம் என உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.