(சுமன்)
மட்டக்களப்பு சித்தாண்டி, மாவடிவேம்பு ஆகிய கிராமத்தை அண்டிய பகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொதுமக்களால் இன்றைய தினம் 19.04.2026 ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுகக்ப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போதையற்ற நாட்டை உருவாக்கு, சட்டத்தரணிகளே போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகாதே போன்ற பல வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியபடி கோசங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் போராட்ட களத்திற்கு வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் மகஜரும் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், இவ் விடயம் தொடர்பில் உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் திணைக்களம், சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதோடும் வருகின்ற நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் குரல் எழுப்புவதாகவும் உறுதியளித்தார்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள், கிராம இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


