நெருக்கடியான நிலைமைக்குள்ளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென இவ்வருடத்ததில் 2177 திட்டங்களுக்காக 11938 மில்லியல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மிக விரைவாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஏற்பாட்டில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணப்புக்குழு கூட்டத்திலேயே அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுகல் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினரால் விளக்கமளிக்கப்பட்டதுடன், தங்களது தொல்பொருள் திணைக்களமே ஆய்வு மற்றும் தொல்பொருள் பராமரிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருவதாகவும் இதனால் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தநிலையில் இந்த விளக்கம் குறித்தும் விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 686 திட்டங்களுக்காக 2072 மில்லியன் நிதி ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் 674 திட்டங்களுக்காக 3626 மில்லியன் ரூபாய்களும் மாகாண சபையின் நிதியின் மூலம் செயற்படுத்தப்படும் 755 திட்டங்களுக்காக 2908 மில்லியன் ரூபாய்களும் மேலும் வெளிநாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் அமுல் படுத்தப்படும் 62 திட்டங்களுக்கு 333O மில்லியன் ரூபாய்களுக்கான திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
இம்மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், சுற்றாடல், வீதிகள், பாலங்கள் அமைத்தல், யானை வேலி அமைத்தல், சிறு குளங்களை புனரமைத்தல், காணி பிரச்சினைகள், எரிபொருள் வழங்கல், உரப் பிரச்சினை, மேய்ச்சல்தரை பிரச்சினை, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, ஆளணியினர் பற்றாக்குறை, குடிநீர் வழங்கல், மண் அகழ்வு உட்பட்ட மேலும் பல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.









