எப்.முபாரக்
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் நேற்று(23)காலை
இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மல்லிகைத்தீவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா வர்ணகுலரெட்ணம் (வயது 47) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், நாராயணபுரத்தைச் சேர்ந்த யோகராசா (வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
சேருநுவர பிரிவில் உள்ள மாங்குளம் என்ற பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவிட்டு தங்களுடைய வீட்டுக்கு திரும்புகையிலேயே யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் சேருவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி.தஸ்னீம் பௌசான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படுகாயமடைந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


