தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருள் தொகுதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் முதலாவது சோதனையின் போது, 3 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹசீஸ் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில், 1 கிலோ 994 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் 620 கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய தாய்லாந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அதே விமானத்தில் வந்த 36 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


