வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு காரைதீவில் இருந்து “விழிப்புணர்வு புனித பாதயாத்திரை ” எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 04.09.2026 அன்று திருக்கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை புனித பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, மணற்சேனை, சேனைக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்த அடியார்கள் இந்தப் பாதயாத்திரையில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
பாதயாத்திரையானது காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் உள்ள சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி,
பல்வேறு பகுதிகளைக் கடந்து அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரைதீவில் ஆரம்பமாகும் பாதயாத்திரையில் இணைந்து கொள்ளும் கல்முனை பக்தர்கள், காலை 6.00 மணியளவில் கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஒன்றிணைந்து, மல்வத்தை ஊடாக அம்பாறை நோக்கிப் பயணிக்கும் பாதயாத்திரைக் குழுவினருடன் இணைந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் பக்தர்களும் வழியிலுள்ள குறிப்பிட்ட இடங்களில் பாதயாத்திரைக் குழுவினருடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“அன்பான பக்த அடியார்களே!
இந்தப் புனித பாதயாத்திரையில் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும், பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும், ஆதரவையும், உபசரிப்பையும் வழங்குமாறும் ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“பக்தியுடன் ஒன்றிணைவோம்!
பாதயாத்திரையில் பங்கேற்போம்!
ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரின் திருவருளைப் பெறுவோம்!” எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதயாத்திரையின் மூலம் பக்தி, ஆன்மீகம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


