மண்முனைப்பற்று பிரதேச சிறுவர் சபை கூட்டமும், விழிப்புணர்வு நிகழ்வும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரதேச சிறுவர் சபை 2ம் காலாண்டுக்கான கூட்டம் நேற்று (03) பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. அமிர்தலிங்கம் ரசுகுமாரி அவர்களின் ஒருங்கிணைப்பில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச சிறுவர் சபை சிறுவர்கள் மற்றும் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறார்களினால் திட்ட மொன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதுடன், சிறுவர் கழகங்களை வலுப்படுத்துவதில் காணப்படும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்தோடு ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள சிறுவர் தினத்தினை முன்னிட்டு மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதில் சிறார்கள் பல ஆக்க பூர்வமான நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டு கூட்டம் நிறைவு பெற்றது.

அதன் பின்னர் இச்சிறுவர்களுக்கு “மனோகரி” வழிகாட்டியினூடாக “பொறாமை” எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் 35 சிறுவர்கள் பங்குபற்றினர்.