எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வைத்திய தேவையை நாடும் மக்களுக்கு வினைத்திறன் மிக்க உயரிய சேவையை உறுதி செய்யும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னேற்றம் மற்றும் அங்கு நிலவும் அவசிய தேவைகள் என்பன குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து நிர்வாகிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை (24) திகதி மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இதன்போது, வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் குறிப்பாக ஆளணிப் பற்றாக்குறை தொடர்பாக நிர்வாகிகளிடம் தெளிவாக கேட்டறிந்ததுடன், முன்னிலைப்படுத்த வேண்டிய அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தினார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் 432 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இருதயவியல் சிகிச்சைப் பிரிவையும் அவர் பார்வையிட்டார்.
மேலும் வைத்தியசாலையின் துரித மேம்பாட்டிற்காக சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மிகவும் அவசியமாகத் தேவைப்படும் மருந்துகள், மருத்துவ இயந்திரங்கள் உட்பட அவசியமானவற்றை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நிருவாகிகளிடம் தெரிவித்தார்.
மாவட்டத்தில் மட்டுமன்றி கிழக்கில் முக்கிய வைத்தியசாலையாக கருதப்படும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள், எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் மற்றும் பிரதி பணிப்பாளர் Dr. தாஹிரா சபியுதீன் உட்பட உயர் வைத்திய அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


