போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்முதல் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 மார்ச் 31 ஆம் திகதி அந்தப் முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சந்தேகநபருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவற்றை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களில் பின்வருவன அடங்குவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்,
ஜா-எல பகுதியில் 8.66 பேர்ச்சஸ் காணி: 14 இலட்சம் ரூபாய்
06 வங்கிக் கணக்குகளில் இருந்த பணம்: 59 இலட்சம் ரூபாய்
கொழும்பு 14 பகுதியில் 03 கடைகள்: 225 இலட்சம் ரூபாய்
கொழும்பு 14 பகுதியில் மேலும் ஒரு கடை: 75 இலட்சம் ரூபாய்
கொழும்பு 14 பகுதியில் மூன்று மாடி வீடொன்றுடன் கூடிய காணி: 200 இலட்சம் ரூபாய்
இந்தச் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்திலேயே பெறப்பட்டவை என விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சந்தேகநபர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


