சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதிக்கு யாத்திரை சென்ற சைவ யாத்திரிகர்கள்

( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள் ஆன்மீக பயணமாக இன்று 12.08.2026 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் – தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தை சென்றடைந்துள்ளனர்.

சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய ஆதீன கர்த்தா சுப்பிரமணியம் தியாகராஜா தலைமையில் கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை சித்தாண்டியில் இருந்து பேரூந்து மூலம் ஆன்மீக யாத்திரைப் பயணத்தை ஆரம்பித்த அவர்கள் மாலை யாழ். காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் சிவன் கோவிலுக்கு வருகை தந்தனர்.

11 ஆம் திகதி நேற்று அதிகாலை காரைநகர் சிவன் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக பொன்னாலை வழியாக கடற்கரை பாதையூடாக பல்வேறு ஆலயங்களையும் தரிசித்துக் கொண்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தினை வந்தடைந்தனர்.

கீரிமலையில் இருந்து இன்று 12 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்துக் கொண்டு காலை தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தினை வந்தடைந்துள்ளனர்.

நள்ளிரவு தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றத்தினை தரிசித்து தங்கள் ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு பேரூந்தில் கிழக்கு மாகாணம் திரும்புகின்றனர்.

குறித்த பாதயாத்திரை தொடர்பில் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய ஆதீனகர்த்தா சுப்பிரமணியம் தியாகராஜா கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு மாகாணம் நோக்கிய இந்த ஆன்மீகப் பயணமானது மிகவும் முக்கியமானது. நாங்கள் குழுவாக வருடந்தோறும் ஆறுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரைகளை மேற்கொள்கின்றோம். எங்கள் குழுவில் வயதானவர்களில் இருந்து மிக இளவயதுடையவர்கள் வரை ஆண்கள், பெண்கள் எனப் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர். இப்படியான ஆன்மீகப் பயணங்கள் மூலமாக குறிப்பாக இளையோர்கள் சைவ வாழ்வியலையும், பண்பாட்டையும் நேரடியாக உணர்ந்து அறிந்து கொள்வது மகிழ்ச்சியளிப்பதுடன், மனதையும் உடலையும் புத்துணர்வாக்கவும் இந்தப் பயணம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பானதாகும்.