அரச ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை பின்பற்ற வேண்டும்! இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது!!

( வி.ரி.சகாதேவராஜா)
அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் அரசாங்க சட்டத்தை, சுற்றுநிருப நடைமுறையை மதித்து, அதன்படி பின்பற்ற வேண்டும்.
இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது.

இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலை குழுத் தலைவரும் பிரபல சமூக செயற்பாட்டாளரும்ன சந்திரசேகரம் ராஜன் இன்று (11) தெரிவித்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நிலவும் சுகாதார உதவியாளர்களின் சீருடைப் பிரச்சினை தொடர்பாக அவர் செய்தியாளர் மத்தியிலே உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்

சீருடை அல்லது சீருடைக்கான கொடுப்பனவுகள் பெறும் உத்தியோகத்தர்கள் குறித்த சீருடையையே அணியவேண்டும். மேலும் அனுமதியளிக்கப்பட்ட சீருடையில் கடமையில் ஈடுபடுதல் வேண்டும் என பொது நிருவாக அமைச்சின் 13/2019(01) ஆம் இலக்க அரசாங்க சுற்று நிருபம்
தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

அவர்களுக்கு ஏதேனும் சமய மரபுகளுக்கு இணங்க தமது உடைகளை அமைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இங்கு வழங்கப்படவில்லை எனவும் தெளிவாகக் கூறுகின்றது.

மேலும், சுகாதார சேவை திணைக்களத்தின் 176/2012 சுற்றுநிரூபம் அதற்கும் மேலாக
சுகாதார உதவியாளர்களுக்கான சீருடை தொடர்பாக சுகாதார திணைக்களத்தின் 07/2000 ஆம் இலக்க 28.06.2000 இல் வெளியிடப்பட்ட சிறப்பு நடைமுறை விளக்கமாக அளவு விதிகளுடன் அவர்களது சீருடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை கோட்டுப் படத்துடனும் துல்லியமாக காட்டியுள்ளது.
இதில் எந்த சந்தேகமும் இல்லை.

இறுதியாக சுகாதார அமைச்சு சுகாதார உதவியாளர்கள் குழாத்தின் சீருடைகளை திருத்தம் செய்தல் என்ற தலைப்பில் 2012 .11.30 இல் வெளிவந்த 02/176/2012 ஆம் இலக்க சுற்று நிருபத்தில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சீருடை அல்லது சீருடைக்கான கொடுப்பனவுகள் பெறும் உத்தியோகத்தர்கள் குறிப்பாக சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஊதாரணமாக தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், சாரதியினர் தமது கடமையின் நிமித்தம் அங்கீகரிக்கப்பட்ட உடையினை அணிவதே அந்த சேவையினை செய்வதற்கான பொருத்தமான முறையாகும் என்பதுடன் தமது அடையாளங்கள் மூலமாக அவர்கள் இன,மத அடையாளங்களை பிரதிபலிக்காமல் எல்லா மக்களும் ஒன்றானவர்கள் என்ற நோக்கிலும் கடமைக்கு பொருத்தமான முறையிலும் அமைய வேண்டும் என்பதனாலேயே அதற்காக பிரேத்தியகமான அங்கீகரிக்கப்பட்ட ஆடையை அணிவதற்கு பணிக்கப்பட்டுள்ளனர். என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் நிருவாகம் சட்டப்படி அரச சட்டத்தை செயல்படுத்துகின்றது .இதில் யாருக்கும் அநீதி இழைக்கவில்லை. இனம் மதம் மொழி பேதம் பார்க்கவில்லை. இங்கு தமிழர் முஸ்லிம் சிங்களவர் அனைவரும் சந்தோஷமாக திருப்தியுடன் சேவையாற்றுகின்றனர். என்பதை அங்குள்ள குழுத் தலைவர் என்ற அடிப்படையில் நானும் ஆணித்தரமாக கூறுகின்றேன்.

சீருடைத் தொழில் என்று சொல்லப்படுகின்ற போலீஸ், முப்படையினர், பாதுகாப்பு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தாதியர் , சுகாதார உதவியாளர்கள், எல்லாம் அந்தந்த குறித்த உடையை அணிய வேண்டுமே தவிர, அவரவர் கலாச்சார உடையை அணிய முடியாது. அப்படி எந்த சட்டத்திலும் கிடையாது. மத இன கலாச்சாரத்தை தங்கள் தங்கள் மத ஸ்தாபனங்களில் வைத்து கொள்ளலாம்.எனவே தேவையில்லாத இனமதவாத சிந்தனைகளை இதற்குள் திணித்து இனங்களிடையே வன்மத்தை விதைக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன்