களுவாஞ்சிகுடியில் ‘ரன்விமன’ சமுர்த்தி விசேட வீட்டுத்திட்ட மூன்று வீடுகள் கையளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா)

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் “ஆரோக்கிய வசதியுடனான ஒரு வீடு – வலுவான ஒரு குடும்பம்” என்ற தொனிப்பொருளின் கீழ் 2025ம் ஆண்டிற்கான ‘ரன்விமன’ சமுர்த்தி விசேட வீட்டுத்திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது செட்டிபாளையம் தெற்கு, களுதாவளை–04 மற்றும் எருவில் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த மூன்று பயனாளிகளுக்கு இவ் சமுர்த்தி விசேட வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், குறித்த பயனாளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூபாய் 10,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன

இவ்வீடுகளை நிர்மாணிப்பதற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபா 1,000,000.00 நிதி உதவியாக வழங்கப்பட்டதுடன், மீதமுள்ள தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் மக்கள் பங்களிப்பின் மூலம் வழங்கப்பட்டு வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி விமலராணி யோகேந்திரன், மாங்காடு, எருவில் மற்றும் கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமூக அபிவிருத்தி உதவியாளர், வலய உதவியாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம பிரதிநிதிகள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு, வீடற்ற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் சமுர்த்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.