இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் ஊடாகத் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடிகள் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரினால் நாற்பத்து மூன்று இலட்சத்து எண்பத்தாறாயிரத்து இருநூற்று பத்தொன்பது (4,386,219) ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதுடன், அந்தப் பணத்தில் 5 இலட்சம் ரூபாய் பணத்தை அவர் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


