எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டுவதற்கான செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (02) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் UNESCO நிறுவனத்தின் தேசிய திட்ட அதிகாரி சாருதத் ஏக்கநாயக்க பங்குபற்றுதலுடன் திட்ட இணைப்பாளர் எஸ். சிவசுப்பிரமணியம் ஏற்பாட்டில் இக்கலந்துரையால் இடம் பெற்றது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) மற்றும் World Vision நிறுவனம் இணைந்து “வாருங்கள் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
இதன்படி, வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தலா ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் சமூக மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடல் மற்றும் சமூக பங்கேற்பின் ஊடாக சுமூகமான முறையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக மீனவர்கள், விவசாயிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் எதிர்நோக்கும் சவால்களை இனங்கண்டு, அவற்றுக்கு நிலையான தீர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயன்முறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் போது கடலரிப்பு, சட்டவிரோத மீன்பிடி, கடலோர பாதுகாப்பு, கலங்கரை விளக்குகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் மின்விளக்குகள் அமைத்தல், யானை–மனித மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள், நீர்ப்பாசன கால்வாய்களின் புனரமைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக சமூக மட்ட அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்ட கொரிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
சமூக மட்டத்தில் அமைதியை நிலைநாட்டவும், முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகளைத் தடுக்கும் வகையில் தொடர்ச்சியான சமூக உரையாடல்களை மேற்கொள்ளும் திட்டத்தின் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட், வாகரைபிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்தீபன், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மலராஜ், ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி டி.சசிதரன், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


