நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக பி. சத்தீஸ்கரன் பதவியேற்பு

நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் செயலாளராக நீண்டகாலமாக கடமையாற்றி வந்த பி. சத்தீஸ்கரன் அவர்கள், நிரந்தர செயலாளராக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று (02) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாவிதன்வெளி பிரதேச சபை வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் முன்னிலையில் அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு புதிய பொறுப்பை ஏற்றார்.

இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உப தவிசாளர் கே. புவனரூபன், சபை உறுப்பினர்களான கே. உதயகுமார், எம். பி. நிவாஸ் மற்றும் அப்துல் லத்தீப் ஆகியோருடன் சபையின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய நிரந்தர செயலாளருக்கு மலர்மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டதுடன், அவரது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட அனைவரும் தங்களது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.