சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பயணம் நிறைவு நாடு திரும்பும் குழுமத்தினர்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்று (30) நாடு திரும்புகின்றனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பெபஜியோர்கியு (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான வலிமையை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்த நாணயக் கொள்கையானது மிகுந்த விழிப்புடனும், தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் இருக்க வேண்டும் என நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்த சீர்திருத்த வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்த நிபுணர்கள் குழுவினர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்’ கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்க அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்தனர்.