அரசின் விலை 1Kg – Rs 137 போதுமானதா..! மட்டக்களப்பு விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்களா? அரசு நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யுமா?
அரசின் நெல் கொள்வனவு விலை 1Kg இக்கு 137 என அமைச்சர் தெரிவித்தார். இவ் விலையானது நியாயமானதாக இருக்குமா..!
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இன்று (24.06.2026) நடைபெற்ற பாராளுமன்ற கேள்வி – பதில் நேரத்தில் முக்கிய கவனயீர்ப்பு இரா. சாணக்கியனால் முன்வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மொத்த உரத் தேவை சுமார் 8,000 மெட்ரிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் இதுவரை 4,000 மெட்ரிக் தொன் உரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், CCS லங்கா நிறுவனத்தினால் 443 மெட்ரிக் தொன் உரம் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும், இதுவரை 300 மெட்ரிக் தொன் உரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் உரிய காலத்தில் போதுமான அளவு உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு கிலோகிராம் நெல்லை உற்பத்தி செய்வதற்கு 135 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை செலவாகும் நிலையில், நெல்லுக்கான உத்தரவாத விலை 150 ரூபாவிற்கு மேல் நிர்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,000 முதல் 3,500 மெட்ரிக் தொன் வரையிலான நெல்லைக் களஞ்சியப்படுத்தும் வசதிகள் மட்டுமே காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
விவசாயிகள் முன்னெடுத்த போராட்டங்களே கடந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியதாகவும், தற்போதும் அதேபோன்ற சூழ்நிலை உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். நெல்லுக்கான நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதேவேளை, நெல்லை அரசாங்கம் நேரடியாகக் கொள்வனவு செய்யும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிப் பகுதியில் நாட்டை தாக்கிய ‘தித்வா’ சூறாவளி காரணமாக இலங்கையின் உள்நாட்டு உணவு உற்பத்தித் துறைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக தேசிய அரிசி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்பை வழங்கும் 2025/2026 பெரும்போகப் பயிர்ச்செய்கை, அதன் ஆரம்ப மற்றும் மிகவும் ஆபத்தான கட்டத்திலேயே இயற்கை அனர்த்தத்தின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின்படி, இம்முறை 563,950 ஹெக்டேயர் பரப்பளவு பயிரிடப்பட்டுள்ளதுடன், அதில் பெரும்பாலான பகுதிகள் அதிக மழைவீழ்ச்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன.
தேயிலை, தென்னை, பழவகைப் பயிர்கள் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்கள் உள்ளிட்ட பல உபரி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகளின் வருமான வழிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 2026 சிறுபோகப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள சூழலில், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் பின்வரும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன:
1. 2025/2026 பெரும்போகத்தின் நெல் உற்பத்தி தொடர்பான அரசாங்கத்தின் தற்போதைய மதிப்பீடு என்ன? 2026 ஆம் ஆண்டில் தேசிய மட்டத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதா?
2. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள், விதைநெல், உரம், நடவுப் பொருட்கள், சலுகைக் கடன்கள் மற்றும் இழப்பீட்டு கொடுப்பனவுகள் உள்ளிட்டவை மாவட்ட வாரியாகவும் பெறுமதி அடிப்படையிலும் வெளியிடப்படுமா?
3. வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மையமாகக் கொண்டு, 2026 பெரும்போகப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் உரிய நேரத்தில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை?
4. சில மாவட்டங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும், விவசாய சேவை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் போதுமான அளவு உரம் கிடைக்காத நிலை காணப்படுகிறது. CS (PVT) LTD நிறுவனம் மற்றும் அரசாங்க உரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் விநியோக தாமதங்களால் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் அவசரமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும்.


