எல்நினோ மற்றும் லாநினா ஆகிய காலநிலை மாற்றங்கள் காரணமாக, இலங்கையின் கடல் மற்றும் நீர்நில வாழ் உயிரினங்களின் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இலங்கையின் காலநிலைக்கான நாடாளுமன்ற ஒன்றியம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட குழுக்கூட்டத்தின் போதே இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்த கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் நடைபெற்றது.
மாறிவரும் காலநிலை நிலைமைகளுக்கு மத்தியில், நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
உலகளாவிய காலநிலை மாற்றங்களால் இலங்கையின் அரிய வகை நீர்,நில வாழ் உயிரினங்கள் மற்றும் கடல்சார் உயிர்த்தொகுதிகள் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சவால்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கான கொள்கை ரீதியான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இதன்போது கலந்துரையாடினர்.


