ஊடகவியலாளர்களுக்கு புதிய ஒழுக்கக்கோவை!

நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பைத் தாபிப்பதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதியன்று இந்த விசேட வர்த்தமானி குறைநிரப்பியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின்படி, புதிய நிறுவகமானது சுயாதீனமாக இயங்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமையவுள்ளதுடன் பின்வரும் முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு செயற்படவுள்ளது.

ஊடகத்துறையில் பணியாற்றும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்தொழிலாளர்களையும் ஒரே தொழில்சார் ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருதல்.

தகைமை வாய்ந்த ஊடகவியலாளர்களை உறுப்பினர்களாக நிரலிற் சேர்த்தல் மற்றும் அவர்களின் தராதரங்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமளித்தல்.

ஊடகக் கல்வி, பயிற்சி நெறிகள் மற்றும் பரீட்சைகளை நடாத்தி, சர்வதேச ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல்.

மிக முக்கியமாக, அனைத்து உறுப்பினர்களும் மாணவர்களும் பின்பற்றுவதற்கென விசேட நடத்தைக் கோவையொன்றைத் தயாரித்து, தொழில்சார் ஒழுக்காற்றைப் பேணுதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் இந்த நிர்வகத்தின் நிருவாகக் கருமங்களை முகாமைத்துவம் செய்வதற்காக 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் பேரவையொன்று நியமிக்கப்படவுள்ளது.

இதில் ஊடகத்துறையில் தகைமையும் அனுபவமும் மிக்க 8 பேர் தேர்தல் மூலமும், 7 பேர் நியமனம் மூலமும் உள்வாங்கப்படுவர்.

ஆளும் பேரவை முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை, தற்காலிகமாக “இடைக்காலப் பேரவை” ஒன்று அமைச்சரினால் நியமிக்கப்படும். இந்த இடைக்காலப் பேரவையில் அமைச்சின் செயலாளருடன், ஊடகத்துறையில் ஆகக்குறைந்தது 20 வருட அனுபவம் வாய்ந்த 6 நிபுணர்கள் இடம்பெறுவர் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது