நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் சட்டவிரோத துப்பாக்கி உள்ளதா?

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் உத்தியோகபூர்வ துப்பாக்கியைத் தவிர, மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழக அரசியல் கட்சித் தலைவர் சீமானை அச்சுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, “இந்தியாவுக்கு துப்பாக்கி எடுத்து வர முடிந்திருந்தால் சீமானைச் சுட்டுக் கொன்றிருப்பேன் அல்லது அவர் யாழ்ப்பாணம் வந்தால் சுட்டுக் கொல்வேன்” என பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அத்துடன், பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய வழக்கில் அர்ச்சுனாவின் உத்தியோகபூர்வ துப்பாக்கி ஏற்கனவே நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்கையில், அவர் மீண்டும் “சுட்டுக் கொல்வேன்” எனக் கூறுவது அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத ஆயுதம் இருப்பதை உறுதிப்படுத்துவதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தால் தமிழகத்தில் தற்போது கண்டனப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியாவின் இறையாண்மைக்கும் சவாலாக அமைந்துள்ளது.

ஆபத்துக் காலங்களில் உதவும் அண்டை நாட்டுடனான இராஜதந்திர உறவைப் பாதுகாக்க, சபாநாயகர் உடனடியாக தலையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் உரையைச் சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், இவ்வாறானவர்களுக்கு விசா வழங்குவதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.