மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும் இணைத் தலைவருமான ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் பங்கு பற்றுதலுடன் புதிய மாவட்ட செயலகத்தில் (14) இடம் பெற்றன.
இதன் போது மாவட்டத்தில் நிலையான உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விவசாயம், கடற்தொழில், கால்நடை உற்பத்தி துறைகளில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டம் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் பல ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.
மேலும் காலநிலை மாற்றம் அனர்த்த நிலைமைகள், பொருளாதார நெருக்கடிகளின் போது சீராக உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயற்திட்டஙங்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டதுடன் உற்பத்தியில் பாதிப்பு செலுத்தும் காரணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


