தித்வா புயலினால் சிக்கி இறந்த கால்நடைகளுக்கான இரண்டாம் கட்ட இழப்பீடு வழங்கல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலினால் சிக்கி இறந்த கால்நடைகளுக்கான இரண்டாம் கட்ட இழப்பீடு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்கள பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ. ஹாதி அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்களின் பங்கு பற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) இடம் பெற்றன.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.எம். சுல்பிஹார் அபூபக்கர் கலந்து கொண்டனர்.

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு அரசாங்கத்தினால் 13 கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டாம் கட்டமாக 07 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவிற்குற்பட்ட வாழைச்சேனை, ஒட்டமாவடி ,கிரான், ரிதிதென்ன, செங்கலடி, கரடியனாறு, வவுனதீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களுக்கான காசோலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்திற்கு பாரியளவு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்
தித்வா புயலினால் வாகரை, கிரான், செங்கலடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பண்ணையாளர்களின் கால்நடைகள் அதிகம் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் ஏ.எல்.எம் அஸ்மி, விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், உயர் அதிகாரிகள்,கால்நடை வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர் மாவட்டத்தில் புயலினால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதுடன் கிழக்கு மாகாணமானது தேசிய ரீதியில் முதலாம் இடத்திற்கு வருவதற்கு பண்ணையாளர்கள் உழைக்க வேண்டும் என்றார்.

இலங்கையின் தேசிய உற்பத்தியில் கிழக்கு மாகாணம் 16% மான பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.