நாட்டுக்குத் தேவையான மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் இன்று (26) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்கையில்,
நாட்டுக்கு இன்று வருகை தரும் குறித்த கப்பலில் 95,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மேலும் பல எரிபொருள் கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளன.
இதேவேளை 9,500 மெற்றிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளை (27) நாட்டை வந்தடையவுள்ளது.
அத்தோடு 36,000 மெற்றிக் தொன் எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் நாளை மறுதினம் (28) நாட்டை வந்தடையவுள்ளது.
இந்த எரிபொருள் இறக்குமதிகள் மூலம், எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நாட்டின் தேசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருக்கும் என அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.


