தாயக மக்களை வலுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்துவது மக்களையே பாதிக்கும்

த.சுபேசன்

தாயக மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அது தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் எனவும் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பினுடைய ஸ்தாபகர் விஜயரத்தினம் தனுஸ் தெரிவித்துள்ளார்.

இலக்கியா-தென்றல் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி ஜெயச்சித்திரா அண்மையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா-தென்றல் அமைப்பானது போரினால் பாதிக்கப்பட்ட மக்கள்,இஸ்லாமிய மற்றும் சிங்கள சகோதரர்களுக்கு எந்தவிதமான வேற்றுமைகளும் இன்றி தேவைப்பாடுகளை அறிந்து உதவி வருகின்றது.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்டிருந்த டித்வா அனர்த்த நிலைமையின் போதும் எந்தவிதமான பாகுபாடுகளும் இன்றி உதவியிருந்தோம்.

இந்நிலையில் கடந்த வாரம் எமது செயற்பாட்டாளர் திருமதி ஜெயச்சித்திரா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.அவர் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு,தியாகி திலீபன் நினைவேந்தல்,அன்னை பூபதி அம்மா நினைவேந்தல் என பல நிகழ்வுகளை முன்னின்று நடத்தியவர்.
இவ்வாறான நிலையில் குறுகிய காலத்திற்குள் மூன்று தடவைகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் முயற்சி எமது தனிப்பட்ட முயற்சி.
எமது செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல.
எனது சகோதரர்கள் இருவருடையதும் ஆத்ம திருப்திக்காகவே அவர்களுடைய நினைவாக உதவித்திட்டங்களை செய்கினாறேன்.
இது கட்டமைப்பும் அல்ல .புலம்பெயர் அமைப்பும் அல்ல.

எனவே தேவைப்பாடுடைய மக்களுக்கு உதவி செய்வதனை எவரும் தடுக்கக்கூடாது.
எமது செயற்பாடுகள் மூவின மக்களுக்குமான பணி.
யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகள் இன்றி பல மக்கள் வாழ்கின்றனர்.
இவ்வாறான மக்களுக்கான உதவிகளை தடுத்து நிறுத்துவதால் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்.
இதனை சகலரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாவீரர் நினைவேந்தல் மூலம் விடுதலைப்புலிகள் மீள் உருவாகி விடுவார்கள் என்று எண்ணக் கூடாது.
இனத்திற்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆத்ம திருப்தியை ஏற்படுத்துகின்றது.மாவீரர்களைக் கடந்து எம்மால் செல்ல முடியாது.

ஒருசில அச்சுறுத்தல் செயற்பாடுகளால் மக்களுக்கான பணியை ஆற்ற பலரும் அஞ்சுகின்றனர்.
நாம் அரசிற்கு எதிராக எதனையும் செய்யவில்லை.நல்ல ஒரு அரசு அமைந்துள்ளது.
அரசுடன் இணைந்து நாட்டினைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும்.
புலம்பெயர் நிதி உதவிகள் நாட்டைக் கட்டியெப்புவதற்கு பெரிதும் உதவும்.என மேலும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.